செய்திகள்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி

Published On 2020-03-30 08:30 GMT   |   Update On 2020-03-30 08:30 GMT
புதுச்சேரி சட்டசபையில் இன்று ஏப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான 2,042 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் 3 மாத செலவீனங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் இன்று கூடியது. கொரோனா நோய் தொற்று தடுப்பு காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைவெளி விட்டு அமர நாற்காலிகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.

பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. செய்தியாளர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஒளிப்பதிவாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. முதல்-அமைச்சர் உட்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர்.

சட்டமன்றத்திற்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கையில் கிருமிநாசினியை தெளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

சட்டமன்றத்திற்குள்  சமூக இடைவெளி விட்டு போடப்பட்ட இருக்கைகளை அதிமுக-பாஜக எம்எல்ஏக்கள் மறுத்து நாற்காலிகளை ஒன்றாக்கி அமர்ந்தனர். புதுச்சேரி சட்டமன்றத்திற்குள் வந்த உறுப்பினர்களுக்கு அரசு கொறடா சானிடைசர் தெளித்தார்.

சட்டமன்ற செயலகம் சார்பில் உறுப்பினருக்கு என்95 முகக்கவசம் அளிக்கப்பட்டது. சட்டமன்ற நிகழ்வு துவங்கியதும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனாவில் இறந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

அடுத்து முதல்வர் நாராயணசாமி பேரவை முன் அரசு ஏடுகளை வைத்து விட்டு ஏப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான 2042 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அதிமுகவினர் கொரோனாவிற்காக சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினார்கள். இது ஏற்கப்படாததால் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முடிவில், கொரோனா குறித்து முதல்வர் நாராயணசாமி விளக்க அறிக்கை வாசித்தார். அதில் புதுச்சேரியில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கொரோனாவை முற்றிலும் தடுக்க 995 கோடி ரூபாய் ஒதுக்க பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.

மேலும் புதுச்சேரி, காரைக்காலில் 21 வெண்ட்டிலேட்டர்கள் தற்போது உள்ளதாகவும், படுக்கைகளும் தயாராக உள்ளதாகவும், கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யும் மையங்கள் புதுச்சேரியில் நான்கும், காரைக்காலில் இரண்டும் உள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரியில் சமூகக் கட்டுப்பாட்டுடன் 85 சதவீதத்தினர் உள்ளதாகவும், மீதமுள்ளோரும் கடைபிடிக்கவேண்டும் எனவும், முதலில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரியில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் கொரோனா நிவாரண நிதியான ரூ.2,000 செலுத்தப்படும் என தெரிவித்தார். 
Tags:    

Similar News