வில்லியனூர் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட துப்புரவு ஊழியர் பலி
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே வி.மணவெளி பாரதிதாசன் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது39). புதுவை நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
கணேசுக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. அளவுக்கு அதிகமாக இவர் மதுகுடித்து வந்ததால் இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இவர் மதுஅடிமை மையத்தில் ஆலோசனைபெற்று சிலகாலம் மதுஅருந்தாமல் இருந்து வந்தார். பின்னர் அவ்வப்போது கணேஷ் மதுகுடித்து வந்தார். மதுகுடிக்கும் நாட்களில் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்படும். அப்போது அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டுவெளியே சென்ற கணேஷ் அதன்பிறகு மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது சாப்பிட்டு விட்டு கணேஷ் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளுக்கு பதிலாக அதிக மாத்திரைகளை சாப்பிட்டார்.
நேற்று காலை வெகுநேரமாகியும் படுக்கையில் இருந்து கணேஷ் எழுந்திரிக்காமல் மயங்கி கிடந்தார். உடனே கணேசை அவரது மனைவி ரஞ்சனி மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கணேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.