செய்திகள்
நகை பறிப்பு

புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு

Published On 2020-03-20 17:35 IST   |   Update On 2020-03-20 17:35:00 IST
புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் பெண்ணை தாக்கி செயினை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை நைனார்மண்டபம் கிழக்குவாசல் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி விஜயகாந்தி (வயது55). இவர் நேற்று இரவு மளிகை பொருட்கள் வாங்க காரில் புதுவை ரங்கப்பிள்ளை வீதிக்கு வந்தார். அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கி காரில் ஏற்றிக்கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காரின் கதவை காலால் எட்டி உதைத்தனர்.

இதனை விஜயகாந்தி தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி விஜயகாந்தியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலின் போது விஜயகாந்தி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் அறுந்தது. இதில் பாதிசெயின் அந்த வாலிபர்கள் கையில் சிக்கி கொண்டது. அந்த செயினுடன் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து விஜயகாந்தி பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவிசப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம வாலிபர்களை தேடிவருகிறார்கள்.

Similar News