செய்திகள்
மரணம்

அரியாங்குப்பத்தில் குடிபோதையில் தவறி விழுந்த டிரைவர் பலி

Published On 2020-03-12 17:24 IST   |   Update On 2020-03-12 17:24:00 IST
அரியாங்குப்பத்தில் குடிபோதையில் படிக்கட்டில் தவறி விழுந்த டிரைவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் சிவா (வயது 57). இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

டிரைவர் வேலை செய்து வந்த சிவா குடிப்பழக்கத்துக்கு ஆளானார். இதனால் கடந்த 5 மாதமாக டிரைவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.

அதுபோல் நேற்று முன்தினம் இரவு சிவா மது குடித்து விட்டு போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் படிக்கட்டில் ஏறிய போது சிவா போதையில் தடுமாறி விழுந்தார். இதில், நெற்றியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவாவை அவரது மனைவி அழகம்மாள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News