செய்திகள்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published On 2020-02-06 12:06 IST   |   Update On 2020-02-06 12:49:00 IST
தெப்பக்காடு யானைகள் முகாமில் சிறுவனை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழற்ற சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி:

தமிழக அரசு சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு ஆண்டு தோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது.

இதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டில் டாப்சிலிப், முதுமலை தெப்பக்காடு பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கும் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் அந்தந்த முகாம்களிலேயே நடந்து வருகிறது.

அதன்படி முதுமலை தெப்பக்காட்டில் இந்த ஆண்டுக்கான வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது.

தொடர்ந்து 48 நாட்கள் நடக்கும் இந்த புத்துணர்வு முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். பின்னர் யானைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அப்போது நடந்து சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பு புல்வெளியில் சிக்கி கொண்டது. இதனை பார்த்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த ஆதிவாசி சிறுவனை ‘டேய் இங்கே வா’ என அழைத்து தனது செருப்பை கழற்றுமாறு கூறினார். அந்த சிறுவனும் அமைச்சர் அணிந்திருந்த செருப்பை கழற்ற முயன்றார். அப்போது அருகில் இருந்த உதவியாளர் ஒருவர் அந்த சிறுவனை தடுத்து அவர் அமைச்சர் அணிந்திருந்த செருப்பை கழற்றினார். இந்த சம்பவத்தின் போது நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் அங்கிருந்தனர்.

ஆதிவாசி சிறுவனிடம் அமைச்சர் தனது செருப்பை கழற்ற சொன்ன சம்பவம் ஆதிவாசி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News