செய்திகள்
திருட்டு வழக்கில் கைது

வீட்டில் நகை - பணத்தை திருடிய 2 பேர் கைது

Published On 2019-11-29 17:41 GMT   |   Update On 2019-11-29 17:41 GMT
அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் நகை - பணத்தை திருடியது தொடர்பாக 2 பேரை காவல்துறை கைது செய்தது.
வரதராஜன்பேட்டை:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியகருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றுவிட்டார். அப்போது அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து, 9 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.42 ஆயிரம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் கருக்கை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனை செய்தபோது, சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கடலூர் மாவட்டம் ஸ்ரீமு‌‌ஷ்ணம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னே‌‌ஷ் (வயது 37), பெரியகருக்கை கிராமத்தை சேர்ந்த பிரபு என்ற ராஜேந்திர பிரசாத்(27) என்பதும், ராஜேந்திரன் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது அவர்கள்தான் என்பதும், தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையை போலீசார் மீட்டனர். மேலும் 2 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News