வாலாஜாபாத் அருகே 16 வயது சிறுவன் வெட்டி கொலை
செங்கல்பட்டு:
வாலாஜாபாத் அருகே உள்ள குருவன்மேடு பகுதியை சேர்ந்தவர் அருள். இவரது மகன் சூர்யா (வயது 16). ஜே.சி.பி. எந்திரம் ஒன்றில் கிளீனராக வேலை பார்த்து வந்தான்.
நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சூர்யா திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் குருவன் மேடு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சூர்யா கொலை செய்யப்பட்டு கிடந்தான். அவனது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.
மர்ம கும்பல் அவனை அரிவாளால் வெட்டி கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து பாலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக சூர்யாவுடன் பழகிய நண்பர்கள் சிலரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டியதாக தெரிகிறது.
இதனை அறிந்த சூர்யா இதுபற்றி அந்த நபரிடம் கூறியுள்ளார். இந்த மோதலில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.