செய்திகள்
இளம்பெண் தற்கொலை

குலசேகரம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2019-07-15 11:03 GMT   |   Update On 2019-07-15 11:03 GMT
குலசேகரம் அருகே நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குலசேகரம்:

குலசேகரத்தை அடுத்த நாககோடு, அம்பலத்து விளையை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 35). கூலி தொழிலாளி. சுனில் குமார் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வஜூ (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு கணவன்- மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்தனர்.

இந்த நிலையில் வஜூவின் நடத்தையில் கணவர் சுனில் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி அவர் மனைவியிடம் கேட்டதால் அவர்கள் இடையே மீண்டும் தகராறு மூண்டது.

நேற்றும் இதுபோல கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கணவர் சுனில் குமார் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று மாலையில் சுனில்குமார் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அங்கு அவரது மனைவி வஜூ, வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வஜூ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் வீட்டில் இருந்த மாத்திரைகளை தின்று தற்கொலை செய்ததாக தெரிகிறது. இது பற்றி குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று வஜூவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News