செய்திகள்

அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு- முதல்வர் அறிவிப்பு

Published On 2018-10-16 13:39 GMT   |   Update On 2018-10-16 13:39 GMT
அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #SportspersonsQuota #EdappadiPalaniswami
சென்னை:

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவின் போது தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார்.

இதையடுத்து தமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசும்போது, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடானது 3 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

‘தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதலிடத்திற்கு வர அரசு அனைத்து உதவிகளையும் செய்யும், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களின் பலத்தை மதிப்பீடு செய்து திட்டமிட வேண்டும். இந்த அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் விளையாட்டுத் துறைக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு  நிதி உதவி வழங்கி வருகிறது.

சென்னை தவிர்த்து 31 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்திற்கு விளையாட்டு மைதானம், உபகரணங்கள் மற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.’ எனவும் முதல்வர் பேசினார்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். #SportspersonsQuota #EdappadiPalaniswami
Tags:    

Similar News