செய்திகள்

தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2018-09-15 16:33 GMT   |   Update On 2018-09-15 16:33 GMT
சிங்காரப்பேட்டை அருகே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள மூன்றம்பட்டியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருடைய மகன் ஞானவேல்(வயது28). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்று தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய அண்ணன் முனிராஜ் ஞானவேலை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஞானவேல் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மின்சாரம் தாக்கி பலியான ஞானவேலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ஞானவேலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது. 
Tags:    

Similar News