செய்திகள்

வில்லியனூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2018-08-27 16:19 IST   |   Update On 2018-08-27 16:19:00 IST
வில்லியனூர் அருகே மாசு கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே பொறையூர் கிராமத்தில் வள்ளுவன்பேட் பகுதி உள்ளது. இங்கு ஏராளமானோர் குடியிருந்து வருகிறார்கள். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாசு கலந்த குடிநீர் (பழுப்பு நிறத்தில்) வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து மாசு கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்கள் புகார் தெரிவித்த குடிநீரை ஆய்வு செய்தனர். அப்போது குடிநீர் மாசு கலந்து இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து பாதுகாப்பான குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News