திருப்பூர் குமரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தல் மனு தாக்கல்- பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருப்பூர்:
திருப்பூர் குமரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 2 மாதத்திற்கு முன் நடைபெற்றது. அப்போது தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் திரண்டு வந்ததால் தள்ளு முள்ளு உருவானது. போலீசாருடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அங்கு திரண்டு இருந்தவர்கள் கலைந்து சென்றனர். அங்கு பதட்டம் நிலவியதால் வேட்பு மனு தாக்கல் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான மனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. இதனை தொடர்ந்து திருப்பூர் குமரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் முன் பல்வேறு கட்சியினர் திரண்டு இருந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்பகுதியில் பேரிகார்டு அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய குறிப்பிட்ட அளவிலானவர்களை மட்டுமே போலீசார் அனுமதித்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.