செய்திகள்

திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2018-08-14 08:29 GMT   |   Update On 2018-08-14 08:29 GMT
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி, தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த தண்டலஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் ஸ்ருதி(18). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார்.

இவரும் பன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் சிவகுமாரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த விவகாரம் ஸ்ருதி வீட்டில் தெரிந்ததும், அவரது கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். மேலும் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து காதல் ஜோடியான ஸ்ருதியும், சிவக்குமாரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இருவரும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரணை நடத்தினார். இருவீட்டாரின் பெற்றோர்களை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News