செய்திகள்

வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் வாலிபர் கையை துண்டித்த மர்ம கும்பல்

Published On 2018-08-13 10:18 GMT   |   Update On 2018-08-13 10:18 GMT
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் வாலிபர் கையை துண்டித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாப்பேட்டை:

வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் வாலிபர் ஒருவர் பலத்த காயத்துடன் அலறி துடித்தார். அவரது இடது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. வலது கையும் பலத்த காயத்துடன் தொங்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விசாரணையில் அவர் பெருமாள்பட்டை சேர்ந்த பால் தினகரன் (வயது 22) என்பது தெரியவந்தது. மர்ம கும்பல் தன்னை வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டதாக அவர் கூறியுள்ளார்.

முன்னுக்குப் பின் முரணாக அவர் தகவல் தெரிவித்து வருகிறார். பால் தினகரனின் இடது கையை காணவில்லை. அதனை போலீசார் தேடி வருகிறார்கள். முன் விரோதத்தில் அவர் வெட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News