செய்திகள்

பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வட மாநில வாலிபர்கள் பலி

Published On 2018-08-06 10:28 IST   |   Update On 2018-08-06 10:28:00 IST
பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வட மாநில வாலிபர்கள் மீது வேனின் கதவு திறந்து மோதியதால் பலத்த காயமடைந்த இருவரும் பலியாகினர்.
பெருந்துறை:

ஒடிசா மாநிலம், டிஜிடூ பத்ராஜ் மாவட்டம், திகார்பூர் பகுதியை சேர்ந்த அமர்மாலிக் என்பவரது மகன் டேனியல் மாலிக் (வயது 25).

இவர் தற்போது பெருந்துறை அடுத்த பணிக்கம் பாளையம் பகுதியில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டைலராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை டேனியல் மாலிக் அதே பகுதியில் தங்கி தன்னுடன் வேலை பார்த்து வரும் நண்பரான ஒடிசா மாநிலம், பானிமோரா பகுதியை சேர்ந்த மானு சாந்த் என்பவரது மகன் பிவேக் சாந்த்(31) என்பவருடன் தனது பைக்கில் பெருந்துறைக்கு சென்றார்.

இவர்கள் பணிக்கம் பாளையம் ரோட்டில் உள்ள பள்ளக்காட்டுத்தோட்டம் பகுதியில் வந்த போது எதிரே பெருந்துறையில் இருந்து பணிக்கம் பாளையம் நோக்கி வந்த ஒரு வேன் இவர்களை கடந்த போது திடீரென வேனின் பின் பகுதியில் உள்ள வலதுபுற டோர் திறந்து இவர்கள் மீது மோதியது.

இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் டேனியல் மாலிக் மற்றும் பிவேக் சாந்த் ஆகிய இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே டேனியல் மாலிக் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்ட பிவேக்சாந்த் ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரும் பரிதாபமாக இறந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் இறந்த 2 பேரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News