செய்திகள்

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்

Published On 2018-08-01 17:13 IST   |   Update On 2018-08-01 17:13:00 IST
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:

அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல உதவி ஆணையராக இருப்பவர் அசோக்குமார். இவரை அ.தி.மு.க பிரமுகர் கோவிந்தராஜன் என்பவர் பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தையால் பேசினாராம்.

மேலும் நான் சொல்கிற படிதான் நடக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்து வந்தாராம். அவரது செயலை கண்டித்து 4-ம் மண்டல அலுவலகம் முன் உதவி ஆணையர் அசோக்குமார் தலைமையில் ஊழியர்கள் 4-ம் மண்டல அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுக்கும் அ.தி.மு.க. பிரமுகர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

ஆனால் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாநகராட்சி அடிமட்ட ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஆவேசம் அடைந்தனர்.

அரசு அதிகாரியையே மிரட்டும் தொனியில் பேசி பணி செய்யவிடாமல் தடுத்து வரும் அ.தி.மு.க. பிரமுகர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? அவரை இயக்குவது யார்? என்று ஆத்திரம் கொண்டனர்.

இன்று (புதன்கிழமை) காலை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், ஊழியர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் மாநகராட்சியின் 4 மண்டலங்களின் உதவி ஆணையர்கள் இளநிலை பொறியாளர்கள் என 1800 பேர் திரண்டு வந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அரசு பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி வரும் அ.தி.மு.க பிரமுகர் கோவிந்தராஜனை உடனே கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.

ஒட்டு மொத்த பணியாளர்களும் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பும்- பதட்டமும் நிலவியது. பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஈரோடு பிரப் ரோடு ஸ்தம்பித்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய ஊழியர்களின் போராட்டம் 10 மணி வரை நீடித்தது.

இது குறித்து 4-ம் மண்டல உதவி ஆணையர் அசோக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவிந்தராஜன் எங்களுக்கு பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்துகிறார். நான் சொல்லும்படிதான் நடக்க வேண்டும். என்று தொந்தரவு செய்து வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். அவர் சொல்லும் வேலையை செய்யாத ஊழியர்களை தாக்கவும் முயற்சித்தார். அவரை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்யாத வரை இங்கிருந்து கலைந்து போக மாட்டோம்“ இவ்வாறு அவர் கூறினார்.

உடனே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் “அவரை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்“ என்று கூறி தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News