பெருந்துறை அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இளம்பெண் மர்ம மரணம்
பெருந்துறை:
கடலூர் மாவட்டம், புவனகிரி, அரகஆலம்பாடி, முகந்தரியான் குப்பம் பகுதியைசேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் தேன்மொழி (வயது 19). இன்னும் திருமணமாகாத பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், புலவர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
கம்பெனி வளாகத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி வேலைபார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து 9 மணியளவில் ஹாஸ்டல் வளாகத்தில் துணிமணிகள் துவைக்கும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதனைக்கண்ட ஹாஸ்டல் வார்டன் தேன்மொழியின் பெற்றோருக்கு அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக தகவல் கொடுத்துள்ளார். இதனால் அலறியடித்து ஊரில் இருந்து தேன்மொழியின் தந்தை கோவிந்தராஜ் கம்பெனிக்கு வந்துள்ளார். அங்கு பணிபுரிந்து வரும் கடலூர் பகுதியை சேர்ந்த தேன்மொழியின் தோழியான தமிழ் என்பவரிடம் விசாரித்த போது, தேன் மொழி நேற்று இரவு துணி துவைப்பதற்காக ரூமில் இருந்து சென்றதாகவும், அங்குள்ள இரும்பு தூணை பிடித்த போது அதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்ட கோவிந்தராஜ் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் இறந்த தேன்மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.