செய்திகள்

கொளத்தூர் அருகே அடுத்தடுத்து 2 குடிசை வீடுகளில் தீ விபத்து

Published On 2018-05-02 12:22 GMT   |   Update On 2018-05-02 12:22 GMT
கொளத்தூர் அருகே அடுத்தடுத்து 2 குடிசை வீடுகளில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்துள்ள நீதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாச்சியம்மாள். இவர் விவசாய தோட்டத்தில் குடிசை வீடு போட்டு வசித்து வருகிறார்.

இன்று அதிகாலை குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது தூங்கி கொண்டிருந்த நாச்சியம்மாள் தீ விபத்து ஏற்பட்டதும் கண் விழித்து பார்த்தார். அங்கு தட்டுமுட்டு சாமான்கள் தீயில் கொளுந்து விட்டு எரிந்ததை கண்டதும் உடனடியாக அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த தீ விபத்து குறித்து கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் கொளத்தூர், செட்டியூர் பகுதியை சேர்ந்த விவசாயி சக்தி என்பவருடைய குடிசை வீட்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ குடிசை முழுவதும் மளமளவென பரவியது. வீட்டில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளும் தீயில் கொளுந்து விட்டு எரிந்தன.

இது பற்றி மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து குடிசை வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர். இருப்பினும் ஏராளமான நெல் மூட்டைகள் தீயில் சாம்பலானதால் விவசாயி சக்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்தனர்.

தீ விபத்து எதனால் ஏற்பட்டது?, சேத மதிப்பு எவ்வளவு? என வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News