செய்திகள்

திருப்பூரில் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-03-02 09:34 GMT   |   Update On 2018-03-02 09:34 GMT
திருப்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்

திருப்பூர் கே.செட்டி பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தங்கம்மாள். தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் விவேகானந்தன் (வயது 13). இவர் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற விவேகானந்தன் மாலை வீட்டுக்கு வந்தார். தனது அறைக்கு சென்ற அவர் வெகுநேரம் கதவை திறக்கவில்லை. மகன் தூங்குகிறான் என்று பெற்றோர் நினைத்தனர்.

நீண்ட நேரம் ஆன பின்னரும் மகன் கதவை திறந்து வெளியே வரவில்லை. இதனையடுத்து கதவை தட்டிப்பார்த்தனர். கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு விவேகானந்தன் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி துடித்து அழுதனர்.

இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பதுருன்நிஷா பேகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவேகானந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விவேகானந்தன் அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் எழுதியிருப்பதாவது:-

நான் பள்ளியில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பேன். இதனை பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் எனது பெற்றோர் போனில் தொடர்பு கொண்டு புகார் செய்தனர். அன்றே நான் தற்கொலைக்கு முயன்றேன். எனது தாய் கதவை தட்டியபோது அப்போது அது முடியாமல்போனது. மாணவர்கள், ஆசிரியர்களால் நான் பாதிக்கப்பட்டேன் என்று எழுதியிருந்தார். மேலும் வகுப்பறையில் சில மாணவர்கள் கேலி-கிண்டல் செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்த வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News