செய்திகள்

கட்சி பணியாற்றாத தி.மு.க. நிர்வாகிகள் மாற்றப்படுவர்- சுரேஷ்ராஜன் எச்சரிக்கை

Published On 2018-02-25 16:29 GMT   |   Update On 2018-02-25 16:29 GMT
கட்சி பணியாற்றாத தி.மு.க. நிர்வாகிகள் பதவி மாற்றம் செய்யப்படுவார்கள் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் நகர தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடந்தது. நகர செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:-

நான் நாகர்கோவில் நகரில் பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்க்க வார்டு, வார்டாக சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். பொதுமக்களும் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

ஆனால் ஒரு சில நிர்வாகிகள் திறம்பட செயல்படாமல் உள்ளனர். நிர்வாகிகள் அனைவரும் திறம்பட கட்சி பணியாற்ற வேண்டும். செயல்படாதவர்கள் பதவி மாற்றம் செய்யப்படுவார்கள்.

ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. மண்டல மாநாட்டில் அதிகளவு நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை வருகிற 1-ந் தேதி மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அணி செயலாளர்கள் சிவராஜ், சதாசிவம், எம்.ஜே. ராஜன், நகர நிர்வாகிகள் நாஞ்சில் நாகராஜன், சைமன்ராஜ், வட்ட பிரதிநிதி வசந்தம் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பார்வதிபுரம் மேம்பாலப்பணி கடந்த 2 வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் மத்திய அரசு இந்த பணியை உடனே தொடங்கி முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நகர தி.மு.க. சார்பில் வருகிற 2-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #tamilnews

Tags:    

Similar News