செய்திகள்

இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல்: கணவர் உள்பட 3 பேர் கைது

Published On 2017-12-29 18:02 IST   |   Update On 2017-12-29 18:02:00 IST
கடலூரில் இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்:

கடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வில்வநகர் பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (வயது 23). இவருக்கும், புதுவை வில்லியனூர் கோட்டை மேடு பகுதியை சேர்ந்த இளஞ்செழியன் என்ற வி‌ஷ்ணு (28) என்பவருக்கும் கடந்த 6.9.2017 அன்று திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் கணவன்-மனைவி இருவரும் செம்மண்டலம் வரத ராஜர் நகரில் குடியிருந்தனர். இந்த நிலையில் இளஞ்செழியன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஷாலினி கடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் கணவருடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தேன். இந்த நிலையில் அவர் திடீரென்று நான் அழகாக இல்லை என்று கூறினார். மேலும் என்னிடம் எனது பெற்றோரிடம் அதிகமாக நகை வாங்கி வரும்படி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கு உடந்தையாக இளஞ்செழியனின் தந்தை முனுசாமி (57), தாய் பூங்கொடி (53) மற்றும் உறவினர்கள் பார்த்தசாரதி, மணிவண்ணன், வேல்முருகன், ரமணி ஆகியோர் இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளஞ்செழியன் அவரது தந்தை முனுசாமி, தாய் பூங்கொடி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Similar News