செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை: 30 ஆயிரம் ஏக்கரில் நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

Published On 2017-12-03 22:56 IST   |   Update On 2017-12-03 22:56:00 IST
கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நெல் பயிர்கள் மற்றும் உளுந்து, மணிலா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், பரங்கிபேட்டை, பெண்ணாடம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் பயிர்கள் மற்றும் உளுந்து, மணிலா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

விருத்தாசலம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், நெல்லிக்குப்பம், பெண்ணாடம், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் நெல் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பண்ருட்டி, கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பெரியபகண்டை கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தோட்டத்தில் வெள்ளநீர் புகுந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் கடலூர் சப்- கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தாசில்தார் விஜய ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும் விளை நிலங்களில் வெள்ளநீர் புகாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கும் பணியை துரிதப்படுத்தினர்.

Similar News