செய்திகள்

வில்லியனூர் அருகே காதலிக்க மறுத்த மாணவியை கொல்வதாக மிரட்டிய வாலிபர் கைது

Published On 2017-11-17 10:24 GMT   |   Update On 2017-11-17 10:24 GMT
வில்லியனூர் அருகே காதலிக்க மறுத்த மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே வடமங்கலத்தை சேர்ந்தவர் விவேக் (வயது 26). பெயிண்டர். இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது மாணவியை பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் காதலிக்குமாறு வலியுறுத்தி வந்தார்.

தொடர்ந்து விவேக் இதுபோன்று தொல்லை கொடுத்து வந்ததால் அந்த மாணவி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி முறையிட்டார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் விவேக்கை தட்டிக் கேட்டு கண்டித்தனர். இதனால் மாணவி மீது விவேக் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் மாணவி மட்டும் இருந்தார். இதனை நோட்டமிட்ட விவேக் நைசாக மாணவியின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவேக் தன்னை காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

மேலும் இந்த வி‌ஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்தால் அவர்களையும் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விவேக்கை கைது செய்தனர்.

Tags:    

Similar News