செய்திகள்

நாகர்கோவிலில் கேமிரா விற்பனையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2017-02-13 14:51 GMT   |   Update On 2017-02-13 14:51 GMT
நாகர்கோவிலில் கேமிரா விற்பனையாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். இந்த துணிகர சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 40). இவர் கேமிரா விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.  இவரது மனைவி செல்வி, மகன் வசந்த். இவர்கள் 3 பேரும் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கினர்.

நேற்று நள்ளிரவு அவரது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்தனர். மாடி வழியாக ஏறிய அவர்கள் அங்குள்ள கதவை உடைத்து கீழ் தளத்துக்கு வந்தனர். அப்போது பாபு தனது குடும்பத்தினருடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர், அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் 3 செல்போனையும் எடுத்தனர்.  பின்னர் பூஜை அறைக்கதவையும் உடைத்து அதில் இருந்த சில பொருட்களையும் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இன்று காலை விழித்தெழுந்த பாபு, வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடப்பதையும், பீரோ உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
டி.எஸ்.பி. ஆறுமுகம் மற்றும் போலீசார்  நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து பீரோ மற்றும் பூஜை அறையில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.  பாபு வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் கிருஷ்ணன் கோவில் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News