செய்திகள்

கணவருடன் மொபட்டில் சென்றபோது லாரியில் சேலை சிக்கியதால் தவறி விழுந்த பெண் பலி

Published On 2016-12-17 08:36 GMT   |   Update On 2016-12-17 08:36 GMT
லாரியில் சேலை சிக்கியதால் தவறி விழுந்த பெண் சக்கரத்தில் சிக்கி இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதுகுளத்தூர்:

கமுதி அருகே உள்ள ராமசாமி பட்டணத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது28). இவரது மனைவி சந்தனமாரி (21). இவர்கள் இருவரும், மொபட்டில் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

நேற்று ராமநாதபுரம் சென்று வியாபாரம் செய்த அவர்கள் மாலையில் காவடிப்பட்டி பகுதியில் உள்ள தங்களது குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர்.

முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் அரசு பள்ளி அருகே மொபட் சென்றபோது முன்னால் தண்ணீர் லாரி சென்று உள்ளது. அதனை செந்தில் முருகன் முந்திச் செல்ல முயன்றார். அப்போது சந்தனமாரியின் சேலை, லாரியில் சிக்கியதால் அவர் தவறி கீழே விழுந்தார்.

லாரியின் அடிப்பகுதியில் விழுந்த அவரது தலையில் சக்கரம் ஏறியதால், சம்பவ இடத்திலேயே சந்தனமாரி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். கணவர் கண் எதிரே மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். விபத்து தொடர்பாக செல்வ நாயகபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் முத்துக்குமார் (35) கைது செய்யப்பட்டு உள்ளார்.

Similar News