செய்திகள்

மயிலாப்பூர் லாட்ஜில் இளம்பெண் கொலையில் காதலன் சிக்கினார்

Published On 2016-12-17 06:49 GMT   |   Update On 2016-12-17 06:49 GMT
மயிலாப்பூர் லாட்ஜில் நடந்த இளம்பெண் கொலையில் சிக்கிய காதலரிடம் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:

சென்னை மயிலாப்பூர் பி.வி.சோலை தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். பழைய பேப்பர் கடை வைத்துள்ளார். இவரது மகள் நிவேதா (வயது 22). எம்.சி.ஏ. பட்டதாரி.

கடந்த 14-ந்தேதி நிவேதா தோழியை பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நிவேதாவின் தோழிகளிடம் விசாரித்தனர்.

ஆனால் அவர் தோழிகளின் வீட்டுக்கு செல்லவில்லை. இதையடுத்து உறவினர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தனர். அங்கும் அவர் செல்லவில்லை.

இதையடுத்து மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் எத்திராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நிவேதாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மயிலாப்பூர் லஸ்கார்னர் அருகே உள்ள ஒரு லாட்ஜில் உள்ள அறையில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக மயிலாப்பூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று லாட்ஜ் அறையை திறந்து பார்த்தனர்.

அப்போது பிணமாக கிடந்த பெண் காணாமல் போன நிவேதா என்று தெரிய வந்தது.

நிவேதா அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் நகக்கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தன. எனவே அவரை யாரோ கற்பழித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். நிவேதா கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

நிவேதாவின் செல்போன் மற்றும் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தனர். அப்போது பேஸ்புக்கில் நண்பராக பழகிய ஒருவர் நிவேதாவுடன் அதிக நேரம் போனில் பேசியது தெரிய வந்தது. அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். மதுரை கூடல் நகரை சேர்ந்த அந்த வாலிபர் நிவேதாவின் காதலன் என்று தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது நிவேதா கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

நிவேதாவுக்கும் அந்த வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலர்கள் ஆனார்கள். இந்த நிலையில் நிவேதாவை பார்ப்பதற்காக அவரது காதலன் மயிலாப்பூர் வந்துள்ளார்.

பின்னர் அவர்கள் இருவரும் மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது நிவேதா தனது காதலருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே அந்த அறைக்கு காதலரின் நண்பரும் வந்துள்ளார். அவரிடம் உல்லாசமாக இருக்குமாறு நிவேதாவை காதலர் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

பிரச்சினை வெளியே தெரிந்தால் ஆபத்தாகி விடும் என்று எண்ணிய காதலரும், அவரது நண்பரும் சேர்ந்து நிவேதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

லாட்ஜில் உள்ள வருகை பதிவேட்டிலும் நிவேதா கையெழுத்திட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக காதலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது நண்பர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News