செய்திகள்

மறைமலைநகர் அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து: 3 கல்லூரி மாணவர்கள் பலி

Published On 2016-10-15 10:22 IST   |   Update On 2016-10-15 10:22:00 IST
மறைமலைநகர் அருகே தடுப்பு சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் பலியாகினர், மாணவி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
செங்கல்பட்டு:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சர்மா சிங் (19), சுமம் சிங் (18), நில்குண்டேல் (19), இமாசல பிரதேசத்தை சேர்ந்த நிலு (19) மற்றும் சித்தர் சிங் (19) ஆகியோர் மறைமலைநகர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர்.

இன்று காலை 5 மணி அளவில் டீ குடிக்க காரில் வீரபுரத்தில் உள்ள தொழில் நுட்ப பூங்காவிற்கு சென்றனர். இவர்களுடன் கல்லூரி மாணவி சிலாங்கீர் (19) என்பவரும் சென்றார்.

டீ குடித்து விட்டு மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே காரில் வேகமாக வந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சர்மா சிங், சுமம் சிங், நில்குண்டேல் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த நிலு, சித்தர் சிங், சிலாங்கீர் ஆகியோரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News