செய்திகள்
விபத்துக்குள்ளான கார் நொறுங்கி உள்ளது.

கோவளம் அருகே மின்கம்பம் மீது கார் மோதல்: 6 மாணவர்கள் உயிர் தப்பினர்

Published On 2016-10-14 13:48 IST   |   Update On 2016-10-14 13:48:00 IST
கோவளம் அருகே மின்கம்பம் மீது கார் மோதலில் 6 மாணவர்களும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மாமல்லபுரம்:

கோவளத்தை அடுத்த வட நெம்மேலி முதலை பண்ணை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக கார் வந்தது.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் இறங்கி 25அடி உயரத்துக்கு பறந்து சென்று அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்தன.

காரில் இருந்த 6 வாலிபர்களும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அப்பகுதிமக்கள் அவர்களை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மணைக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்தவர்கள் அனைவரும் செங்குன்றம், அம்பத்தூர், பட்டாபிராம், பகுதிகளை சேர்ந்த முகமதுகாலித், பிரதீப், தமிழ்வாணன்,ஜெகன்,தீபன், ராமகிருஷ்னன் என்றும், அவர்கள் வெளிநாட்டுக்கு மருத்துவ படிப்புக்கு செல்ல இருந்த கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.

அவர்கள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த போது விபத்தில் சிக்கி கொண்டனர். காரின் முன்பகுதியில் உள்ள பாதுகாப்பு பலூன் விரிந்ததாலும் கார் மீது மின்சார கம்பிகள் விழாமல் இருந்ததாலும் 6 மாணவர்களும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மின்கம்பம் உடைந்ததால் கோவளம் பகுதியில் 5 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News