செய்திகள்

திருமழிசை அருகே ஊராட்சி தலைவர் ஓடஓட விரட்டி கொலை

Published On 2016-10-14 13:36 IST   |   Update On 2016-10-14 13:37:00 IST
திருமழிசை அருகே நடை பயிற்சி சென்ற ஊராட்சி தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செவ்வாப்பேட்டை:

திருமழிசையை அடுத்த மேல்மனம்பேடு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் தங்கராஜ் (வயது 49) மேல்மனம்பேடு ஊராட்சி தலைவராக இருந்தார்.

இவரது மனைவி நிறை மதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. தங்கராஜ் அதே பகுதியில் செங்கல் சேம்பர் தொழில் செய்து வந்தார்.

இன்று அதிகாலை தங்கராஜ் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் வெங்கடேஷ், மணி ஆகியோருடன் பட்டாபிராம் சாலையில் நடை பயிற்சி சென்றார்.

அரசு பள்ளி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கும்பல் திடீரென அவர்களை வழி மறித்தனர்.

அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் உள்பட 3 பேரும் உயிர் தப்பி ஓட்டம் பிடித்தனர். தங்கராஜை மட்டும் குறி வைத்த கொலை கும்பல் அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். மற்ற 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.

தலை, கழுத்து, முதுகில் பலத்த காயம் அடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் கொலைக் கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், டி.எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

தங்கராஜ் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளவேடு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

அவர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொலையுண்ட தங்கராஜ் 2 முறை ஊராட்சி தலைவராக இருந்து உள்ளார். தற்போது மேல்மனம்பேடு ஊராட்சி தலைவர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து அவர் தங்கையை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்து இருந்தார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் கடந்த 1998-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலையில் தங்கராஜிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த முன்விரோதத்தில் கொலை நடந்ததா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதேபோல் தங்கராஜ் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்ததாக தெரிகிறது. இதில் யாருடனும் மோதல் உள்ளதா? அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. வெள்ளவேடு சி.டி.எச். சாலை மற்றும் மேல்மனம்பேடு பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

நடை பயிற்சி சென்ற ஊராட்சி தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News