செய்திகள்

முதுகுளத்தூரை சேர்ந்த காப்பீட்டு நிறுவன மேலாளர் மதுரையில் தற்கொலை

Published On 2016-09-19 09:12 GMT   |   Update On 2016-09-19 09:12 GMT
தனியார் காப்பீட்டு நிறுவன மேலாளர் மதுரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் தீனதயாளன் (வயது29), திருமணமாகாதவர். இவர் தனியார் வாகன காப்பீட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு தனியார் செல்போன் கம்பெனி சார்பில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விட்டு சனிக்கிழமை இரவு மதுரை வந்தார். பின்னர் மதுரை கோர்ட்டு அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று நீண்ட நேரம் அறை திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அவருக்கு ஊரில் இருந்து செல்போன் அழைப்பும் வந்தது. அதை அவர் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் விடுதியுடன் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர். இதை தொடர்ந்து விடுதி ஊழியர்கள் அறைக்கு சென்று நீண்ட நேரம் அழைத்தும் பதில் இல்லாததால் மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோது அறையில் இருந்த மின் விசிறியில் தீனதயாளன் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீனதயாளன் வீட்டில் ரூ.35 ஆயிரம் கேட்டதாகவும், பின்னர் திருச்சிக்கு பயிற்சிக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. எனவே பண பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News