செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே நண்பனின் மனைவியை கடத்தி சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்

Published On 2016-09-17 14:16 GMT   |   Update On 2016-09-17 14:16 GMT
உளுந்தூர்பேட்டை அருகே நண்பனின் மனைவியை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கடத்தி சென்றிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெய்வனை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 22). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு இவருக்கும், எழில்மதி(19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் நெய்வனை கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

ஜெயராமனின் நண்பர் வெங்கடேசன்(22). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள மற்றொரு என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். ஜெயராமனும், வெங்கடேசனும் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். ஜெயராமன் வீட்டிற்கு வெங்கடேசன் அடிக்கடி சென்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி ஜெயராமன் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். இரவு 8 மணிக்கு அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் எழில்மதி இல்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அதேபோல் வெங்கடேசனையும் காணவில்லை.

இதைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டை போலீசில் ஜெயராமன் புகார் செய்தார். அதில் தன் மனைவி எழில்மதியை வெங்கடேசன் கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடத்தப்பட்ட எழில்மதியும் அவரை கடத்தி சென்ற வெங்கடேசனையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நண்பனின் மனைவியை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கடத்தி சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News