செய்திகள்

தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி 3-வது இடத்தில் உள்ளது: இளங்கோவன் பேட்டி

Published On 2016-08-03 08:27 IST   |   Update On 2016-08-03 08:27:00 IST
தமிழக அரசியலில் 3-வது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது என்று கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு :

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீரன் சின்னமலை சிறந்த சுதந்திர போராட்ட வீரர். அவர் வெள்ளையர்களை எதிர்த்து இந்தியா சுதந்திரம் பெற பாடுபட்டவர். அவருடைய பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திரத்திற்காக தமிழகத்தில் போராடியவர்களின் விவரங்கள் வடமாநிலங்களில் தெரிவதில்லை. எனவே இந்த நிலையை மாற்ற வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. போன்ற சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறையவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 6-வது இடத்தில் காங்கிரஸ் கட்சி இருந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவில் தமிழக அரசியலில் 3-வது இடத்தை காங்கிரஸ் கட்சி பெற்று உள்ளது.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Similar News