செய்திகள்

தீரன் சின்னமலை விழாவில் 6 அமைச்சர்கள் பங்கேற்பு: சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள்

Published On 2016-08-01 10:59 IST   |   Update On 2016-08-01 10:59:00 IST
ஓடாநிலையில் நாளை தீரன் சின்னமலை விழாவில் 6 அமைச்சர்கள் பங்கேற்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
ஈரோடு:

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு மண்டபம் மற்றும் அவரது சிலை அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் உள்ளது.

ஆடிப்பெருக்கு நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அவரது நினைவு நாளையொட்டி தீரன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

தமிழக அமைச்சர்கள் கருப்பணன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இதில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இதன்பிறகு காலை 10 மணிக்கு அரசு சார்பில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்குகிறார். மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷ் வரவேற்கிறார்.

இந்த விழாவில் 6 அமைச்சர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

அரசியல் கட்சியினர், மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்க வருவதால் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க ஓடாநிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Similar News