பிற்படுத்தப்பட்டோர்-சீர் மரபினர் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தொழில் கடன்களை வழங்கி வருகிறது.
அதன்படி கடன் பெற விரும்புவோர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும் குடும்ப ஆண்டு வருமானம் கிராமப் புறமாயின் ரூ. 98,000 மற்றும் நகர் புறமாயின் ரூ. 1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும், 60 வயதுக்கு மேற்படாத வராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
சுயஉதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் வணிகம் செய்வதற்கு ஒரு பயனாளிக்கு அதிகப்பட்சம் ரூ.10,00,000 வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு 6சதவீதம் முதல் 8சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகையை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
இத்திட்டம் பெண்களின் சுயசார்பு நிலையினை வலியுறுத்தும் நோக்குடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு வணிகம் செய்வதற்கு ஒரு பயனாளிக்கு அதிகப்பட்சம் ரூ.1,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கடனுக்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகையை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
தொழில் முனையும் பெண்களுக்கு சிறுகடன் வழங்கும் நோக்குடன் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ சிறு தொழில் வணிகம் செய்வதற்கு சிறுகடன் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் உறுப்பினர் ஒருவருக்கு அதிகப்பட்சம் ரூ.50,000 வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கடனுக்கு 4 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகையை 3 ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தனியாக அல்லது குழுக்களாக சிறு தொழில் வணிகம் செய்வதற்கு சிறுகடன் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.50000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகையை 3 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
கார், வேன் மற்றும் மினிவேன், டிராக்டர் , டிரெய்லர் (விவசாய தொழிலுக்கு) போன்ற போக்குவரத்து இனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3.13 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு 10சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகையை 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
தனிநபர் கடன் அதிக பட்சமாக ரூ.10,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் ரூ.1,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.கறவைமாடுகள் வாங்க ரூ.60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.வாகனங்கள் வாங்கிட ரூ.3,13,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.சுயஉதவி குழுவிற்கு ஒரு நபருக்கு ரூ.50,000 என அதிக பட்சமாக ரூ.10,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
தனிநபர் கடனுக்கு ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.மகளிருக்கான புதிய பொற்கால திட்டத்திற்கு ஆண்டிற்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுவிற்கு ஆண்டிற்கு 4சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆடவர் சுயஉதவி குழு விற்கு ஆண்டிற்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கறவை மாடுகள் கடனுக்கு ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. வாகன கடனுக்கு ஆண் டிற்கு 106 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கழகம் (ஆவின்) ஆகியவற்றின் மூலம் கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி கடன் பெற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த வர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இன்று முதல் விண்ணப்பம் பெற்று 30ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.