செய்திகள்

அய்யம்பேட்டையில் ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

Published On 2016-06-01 15:21 IST   |   Update On 2016-06-01 15:21:00 IST
அய்யம்பேட்டையில் ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அய்யம்பேட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணா பட்டினத்தைச் சேர்ந்த அனீபா மகன் இக்பால் (வயது 50). இவர் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அந்த ஓட்டலுக்கு சூலமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கார்த்திக் (வயது 28) என்பவர் சாப்பிட வந்துள்ளார்.

சாப்பிட்ட பில்லுக்கு பணம் கேட்டபோது பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். கத்தியை காட்டி ஓட்டல் உரிமையாளர் இக்பாலை கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு கல்லாவில் இருந்த ரூ.100 பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்த சேர்களையும் உடைத்துவிட்டு சென்றுவிட்டார்.

இதுகுறித்து இக்பால் கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, வழக்கு பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

Similar News