செய்திகள்

மக்கள் குறைதீர்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Published On 2016-05-31 17:39 IST   |   Update On 2016-05-31 17:39:00 IST
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கூறியதாவது:–

பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் ஒவ் வொரு திங்கட்கிழமையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாறுதல் கோரி 26 மனுக்களும், புதிய குடும்ப அட்டை கோரி 09 மனுக்களும் காவல்துறை நடவடிக்கைக்காக 19 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 09 மனுக்களும், பசுமை வீடு கோரி 25 மனுக்களும், கல்வி உதவித்தொகை கோரி 2 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரி 50 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக 15 மனுக்களும், இதர கோரிக்கைக்காக 86 மனுக்களும் என மொத்தம் 241 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 11 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.26150 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் 3 சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டது. மேலும் டெல்லி நகராட்சி கூட்டரங்கில் 19.04.2016 அன்று நடைபெற்ற 125–வது அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பரம்பூர் கிராமத்தை சேர்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவர் சுப்பிரமணியன் என்பவர் தேசிய அளவில் சிறந்த விவசாய சங்கத்திற்கான விருதினை பெற்றதையொட்டி அவருக்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதே போன்று அகில இந்திய அளவில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த ராஜாப்பட்டி மைன் பள்ளியை சேர்ந்த 10 மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Similar News