செய்திகள்

45 நாட்கள் தடை காலம் முடிந்து நள்ளிரவு முதல் கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள்

Published On 2016-05-30 14:20 IST   |   Update On 2016-05-30 14:20:00 IST
45 நாட்கள் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு நாகை மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்கு சென்றனர்.
நாகப்பட்டினம்:

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் மே 29–ந் தேதி வரை 45 நாட்கள் விசைப்படகில் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.

இந்த கால கட்டத்தில் விசைப்படகினர் யாரும் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதில்லை. இந்த தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதனையடுத்து நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நாகை மாவட்டத்தில் பழையாறு, திருமுல்லைவாசல், தென்னம்பட்டினம், பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, சின்னங்குடி, நாகூர், சில்லடி, நாகை, வானவன் மகாதேவி, வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் ஆயிரக்கணக்கான படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.

45 நாட்கள் கழித்து கடலுக்கு செல்வதால் மீனவர்கள் உற்சாகமாக சென்றனர். கடந்த ஆண்டு மீன்பாடு சரியாக இல்லாததால் பல படகுகள் சரியாக கடலுக்கு செல்லவில்லை.

இந்த ஆண்டாவது நல்ல மீன்பாடு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று உள்ளதால் மீன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News