செய்திகள்
மயிலாடுதுறை அருகே பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
மயிலாடுதுறை அருகே பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி துர்க்கா பரமேஸ்வரி காலனியை சேர்ந்தவர் சந்திரமோகன் (30). ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று இரவு மயிலாடுதுறையில் இருந்து சேந்தங்குடிக்கு ஆட்டோவில் சென்றார். அங்குள்ள ஆர்ச் பகுதியில் சென்ற போது சிதம்பரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது.
இதில் சந்திரமோகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் அப் பகுதி மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
விபத்தில் பலியான சந்திரமோகனுக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.