செய்திகள்

மயிலாடுதுறை அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலி: டிரைவர் கைது

Published On 2016-05-28 15:09 IST   |   Update On 2016-05-28 15:09:00 IST
மயிலாடுதுறை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசு பஸ் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அடுத்துள்ள மணல்மேடு காவல் நிலையத்திற்குட்பட்ட கேசிங்கன் பகுதியை சேர்ந்தவர் சக்ரவர்த்தி மகன் நித்தியராஜ்(21). அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் குணாளன்(42) இவர் எலக்ட்ரீசியன். இவருக்கு மனைவி நாகஜோதி, 3 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தை உள்ளனர். குணாளனும் நித்தியராஜிம் மணல்மேட்டில் இருந்து கேசிங்கன் நோக்கி மதியம் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

அப்போது மயிலாடுதுறையில் இருந்து திருச்சிற்றம்பலம் சென்ற அரசு பஸ் இருவர் மீதும் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உடல் நசுங்கி பலியாகினர்.

இதுகுறித்து தகவலறிந்த மணல்மேடு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் ஓட்டுனர் கல்யாணசுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Similar News