செய்திகள்

மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு

Published On 2017-03-25 05:09 IST   |   Update On 2017-03-25 05:09:00 IST
மகாபாரதம் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம் கோர்ட்டில் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் பாலா(வயது38). இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளரான இவர், கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில், நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மகாபாரதத்தை பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்து உள்ளார். பிறரின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கருத்து சொல்வது குற்றம். மகாபாரதம் சூதாட்டத்தை ஊக்குவிப்பது போலவும், மகாபாரத கதையில் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவது போலவும் விஷம கருத்துகளை கமல்ஹாசன் பேசி இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பழவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் கோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பழவூர் போலீஸ் அதிகாரிகள் இந்த புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.

இப்போது கும்பகோணம் கோர்ட்டில் 2-வதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Similar News