செய்திகள்

எடப்பாடி அரசு ஆட்சியில் நீடிக்க தகுதி இல்லை: திருநாவுக்கரசர்

Published On 2017-06-19 16:13 IST   |   Update On 2017-06-19 16:13:00 IST
எடப்பாடி பழனிசாமி அரசு ஆட்சியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மதச்சார்புடைய, வகுப்பு வாத அரசியலை எதிர்த்து மோடிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் ராகுல். குற்றவாளிகள் பதவிகளில் இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கியவரும் அவர் தான்.

சட்டசபையில் ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா, எம்.எல்.ஏ.க்கள் பண பேரம் பற்றி எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காதது கண்டத்துக்குரியது.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இந்த அரசு மீது கவர்னிடம் புகார் செய்துள்ளன. அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.

அ.தி.மு.க.வை உடைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் பா.ஜனதா வைத்துள்ளது. இப்போது இந்த ஆட்சியை காப்பாற்ற பா.ஜனதாவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

எடப்பாடி அரசு ஆட்சியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. ரஜினி அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். முதலில் அவர் அரசியலுக்கு வந்து கொள்கைகள், தனித்து நிற்கிறாரா? என்பதை அறிந்த பிறகே எதுவும் சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கலீல்ரகுமான் ஏற்பாட்டில் முழு உடல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. மத்திய சென்னை மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஏற்பாட்டில் ஏழை விவசாயிக்கு கறவை மாடு- கன்று வழங்கப்பட்டது. வட சென்னை மாவட்டம், எஸ்.சி. துறை சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. 47 பேர் ரத்த தானம் செய்தனர்.

நிகழ்ச்சியில் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி. விசுவநாதன், ஜான்சி ராணி, செல்வபெருந்தகை, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர் மற்றும் ஊர்வதி அமிர்தராஜ், தாமோதரன், வில்லிவாக்கம் சுரேஷ். தணிகாசலம், ஐஸ்அவுஸ் தியாகு, நாச்சிகுளம் சரவணன், கோல்டன் ரபி, அரிபாபு, காதர் முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதம்பாக்கம் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் நடந்த விழாவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆலந்தூர் மண்டல தலைவர் நாஞ்சில் பிரசாத் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதா பிரசாத், கனிபாண்டியன், தனலட்சுமி சுந்தர்ராஜன், பி.எஸ்.ராஜ், சந்தானம், ஐ.செல்வம், ஆதம் ரமேஷ் கலந்து கொண்டனர்.

Similar News