திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் 23-ந்தேதி தொடங்குகிறது
- இந்த உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
- 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல்பத்து உற்சவம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி, பெருமாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. பின்னர் பெருமாள், தேசிகர் சாமியை பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு சென்று, அங்கு பெருமாள், தேசிகர், ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடக்கிறது. இந்த உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு அன்று, சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது. மேலும் மார்கழி மாதம் என்பதால் சாமிக்கு தினந்தோறும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில், 1-ந்தேதி பகல் பத்து உற்சவம் நிறைவடையும் நிலையில், மறுநாள் 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.