வழிபாடு

தூக்க நேர்ச்சை நடைபெற்றதையும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.

கொல்லங்கோடு கோவிலில் இன்று தூக்க நேர்ச்சை திருவிழா: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்

Published On 2023-03-25 07:22 GMT   |   Update On 2023-03-25 07:22 GMT
  • 1,352 குழந்தைகள் தூக்க நேர்ச்சையில் பங்கேற்றனர்.
  • இந்த வழிபாடு நள்ளிரவு வரை நடைபெறும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில்.

இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர நாளில் தூக்கத் திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான தூக்கத் திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

தொடர்ந்து நாள் தோறும் கணபதி ஹோமம், பாராயணம், சமய சொற்பொழிவு, நமஸ்காரம், அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.

9-ம் நாளான நேற்று தூக்கக்காரர்கள் பிரதான பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி, பஞ்சகவ்ய முழுக்கல், கடல் பூஜை செய்து விட்டு கோவிலை அடைந்து நமஸ்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு தூக்க வில்லின் வெள்ளோட்டமான வண்டியோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவின் சிறப்பு நிகழ்வான தூக்க நேர்ச்சை இன்று (சனிக்கிழமை) அதி காலை நடைபெற்றது. தூக்கக்காரர்கள் முட்டுக் குத்தி நமஸ்காரம் செய்தனர்.தொடர்ந்து அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார். காலை 6.30 மணிக்கு தூக்க நேர்ச்சை தொடங்கியது. முதலில் 4 அம்மன் தூக்க நேர்ச்சை நடைபெற்றது.

அதன்பிறகு குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெற்றது. 1,352 குழந்தைகள் தூக்க நேர்ச்சையில் பங்கேற்றனர். இந்த வழிபாடு நள்ளிரவு வரை நடைபெறும். பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு தூக்ககாரர்களின் அணிவகுப்பு ஊர்வலமும் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தேவையானஉணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

தூக்க நேர்ச்சை விழாவையொட்டி குமரி மாவட்டம் மற்றும் கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழக, கேரள அரசுப் போக்கு வரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் வக்கீல் ராமச்சந்திரன் நாயர், செயலர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன்தம்பி, துணைத் தலைவர் சதி குமாரன் நாயர், இணைச் செயலர் பிஜூகுமார், கமிட்டி உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன்தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News