ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் முகூர்த்தகால் நாட்டும் நிகழ்ச்சி
- திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
- ஜூலை 5-ந் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா எழுந்தருளல் நடக்கிறது.
ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் ஆனி உத்திர திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான கால்நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலையில் கன்னி விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முகூர்த்தகால் நாட்டும் விழா நடைபெற்றது. இதற்கான சடங்கு வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் மற்றும் சண்முகம் பட்டர் ஆகியோர் செய்தனர்.
பக்த ஜன சபை சார்பில் பூபால் ராஜன், தெரிசை அய்யப்பன், சுப்பிரமணியன், தங்கமணி மற்றும் திருமுறை பண்ணிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார். இதன் பின்னர் மாலையில் திருவிளக்கு பூஜையும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.
திருவிழா நாட்களில் தினசரி காலையும் மாலையும் சப்பர பவனி நடக்கிறது. சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. நிறைவு நாளான ஜூலை 5-ந் தேதி இரவு சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா எழுந்தருளல் நடக்கிறது.