ஆன்மிகம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்றனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2021-01-27 02:36 GMT   |   Update On 2021-01-27 02:36 GMT
தைமாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று தை மாத பிரதோஷத்தையொட்டி தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

காலை 6.50 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னரே மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பிரதோஷத்தையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், வாசனைத்திரவியங்கள் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தைமாத பிரதோஷம் என்பதாலும், குடியரசு தின விடுமுறை நாள் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News