ஆன்மிகம்

ராமேசுவரத்தில் மேலும் 30 தீர்த்தங்கள்

Published On 2019-01-12 06:13 GMT   |   Update On 2019-01-12 06:13 GMT
ராமேசுவரம் பகுதியில் 62 தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 30 தீர்த்தங்கள் கடந்த சில ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் வைபவம் இன்று நடைபெற்றது.
புனித தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் கோவிலில் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலுக்குள் உள்ள புனித தீர்த்த கிணறுகளில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் இன்னும் பல தீர்த்தங்கள் இருந்ததாக வரலாறுகள் உள்ளன. இதன் அடிப்படையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் ஆராய்ச்சியில் இறங்கியது.

இதில் 1964-ம் ஆண்டு 62 தீர்த்தங்கள் ராமேசுவரம் பகுதியில் இருந்ததாக தகவல்கள் கிடைத்தன. அதில் 30 தீர்த்தங்கள் ஜடாமகுட தீர்த்தம், தங்கச்சிமடம், மண்டபம், உப்பூர், வடகார் உள்பட பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த 30 தீர்த்தங்களும் கடந்த சில ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்பட்டு வந்தன. இந்த பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இதனை தொடர்ந்து 30 தீர்த்தங்களும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் வைபவம் இன்று நடைபெற்றது. தங்கச்சி மடம் அருகே உள்ள மங்கள தீர்த்தம் பகுதியில் இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் பங்கேற்றார். 30 தீர்த்தங்களும் தனித்தனி குடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. மற்றொரு குடத்தில் 30 தீர்த்தங்களும் சேர்த்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த குடங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து காலை 8.10 மணிக்கு 30 தீர்த்தங்கள் அடங்கிய குடத்தின் நீரை மங்கள தீர்த்த தெப்பத்தில் கவர்னர் ஊற்றினார்.
Tags:    

Similar News