ஆன்மிகம்

குறிஞ்சிப்பாடி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2019-01-07 11:16 IST   |   Update On 2019-01-07 11:16:00 IST
குறிஞ்சிப்பாடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குறிஞ்சிப்பாடி உடையார் வீதியில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மார்கழி மாத அமாவாசை விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதைத்தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்து, கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளினார்.

இதையடுத்து பூசாரிகள் தாலாட்டு பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் குறிஞ்சிப்பாடி சின்னக்கடை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலிலும் மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. 
Tags:    

Similar News