தோஷ பரிகாரங்கள்

ஆடி மாத மாவிளக்கு வழிபாடும்.. தீரும் பிரச்சனைகளும்...

Published On 2023-07-18 08:05 GMT   |   Update On 2023-07-18 08:05 GMT
  • ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவது விஷேச பலன்களை தரும்.
  • உங்கள் வம்சத்திற்கு கஷ்டம் ஏற்படாமல் காக்கும்.

ஆடி மாதம் எந்த அளவுக்கு அம்மனை வழிபடுகிறோமோ, அந்த அளவுக்கு குலதெய்வ வழிபாட்டையும் செய்தல் வேண்டும். பெண்கள் ஆடி மாதம் குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தால் குடும்ப நலன்களை ஒருங்கே பெற முடியும்.

இந்த மாவிளக்கு வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

பச்சரிசி கால் கிலோ, பாகு வெல்லம் கால் கிலோ, ஏலக்காய் நாலு, 50 கிராம், நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி ஆகியவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

பச்சரியை நன்கு களைந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும், ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக்கவும்.

மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் பொதுவாய்ச் சலிப்பதில்லை என்றாலும் அவங்க அவங்க வீட்டு வழக்கத்திற்கு ஏற்ப மாறும். நன்கு அரைத்து மாவாகிவிடும் வெல்லத்தைப் போட்டுக் கலந்தால் நன்கு கெட்டியாக உருட்டும் பதத்தில் வரவேண்டும்.

பந்து போல் உருட்டவேண்டும், அவரவர் வீட்டு வழக்கப்படி ஒரு உருண்டை அல்லது இரண்டு உருண்டை பிடிக்கவேண்டும். உருண்டையில் நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும் அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு நேரே அம்மன் சாப்பிட்டால் இலையை எப்படிப் போடுவோமோ அப்படி நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு மாவு உருண்டைகளை வைக்கவேண்டும்.

குழி செய்த இடத்தில் ததும்ப நெய்யை ஊற்ற வேண்டும். திரியை அந்தக் குழியில் விட்ட நெய்யில் வைத்துத் திரியை ஏற்றவும். இப்போது பூவை மாலை போல் இரண்டு மாவிளக்குகளையும் சேர்த்துப்போடவும். நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும். பூவைத்திருக்கும் இடத்திலேயே வெற்றிலை, பாக்கு,வாழைப்பழம் வைத்துத் தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும்.

திரி நன்கு எரியும். நீளமான திரி எரிந்து முடியும் நேரத்தில், அந்தத் திரியை ஒரு கரண்டியில் அல்லது ஸ்பூனால் எடுத்துக் கோயிலில் இருக்கும் விளக்குகள் ஏதாவதொன்றில் அணையாமல் வைக்கவேண்டும்.

பின்னர் தண்ணீர் சுற்றி நிவேதனம் செய்துவிட்டுக் கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.

ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவது விஷேச பலன்களை தரும். வருடத்திற்கு ஒரு முறையாவது மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்து குலதெய்வத்தை வழிபடுவதால் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கும் உங்கள் பரம்பரைக்கும் எப்போதும் இருக்கும். உங்கள் வம்சத்திற்கு கஷ்டம் ஏற்படாமல் காக்கும். திருமண தடை, வேலைவாய்ப்பின்மை, தொழில் – வியாபார முடக்கம் போன்ற நிலைகள் அகலும். வாழ்க்கை மேம்பட எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். துஷ்ட சக்திகள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அணுகாமல் காக்கும்.

Tags:    

Similar News