தோஷ பரிகாரங்கள்

கண் உபாதைகளை தீர்க்கும் கோவில்

Published On 2022-11-26 04:33 GMT   |   Update On 2022-11-26 04:33 GMT
  • திருவாரூர் அருகே உள்ளது, திருக்காரவாசல் என்ற திருத்தலம்.
  • கும்பகோணம் அருகே உள்ளது திருவெள்ளியங்குடி.

* காஞ்சிபுரம் அருகே கூரம் என்ற ஊர் உள்ளது. இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இது கூரத்தாழ்வார் என்னும் மகான் வாழ்ந்த புண்ணிய ஊர் ஆகும். இவர் தன்னுடைய குரு ராமானுஜரின் உயிரைக் காப்பதற்காக, தன்னுடைய கண்களை இழந்தவர்.

* திருவாரூர் அருகே உள்ளது, திருக்காரவாசல் என்ற திருத்தலம். இங்கு கண்ணாயிரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், நான்முகனான பிரம்மனுக்கு, ஆயிரம் கண்களோடு தரிசனம் தந்தவர் ஆவார். இந்த இறைவனை அரைக்கீரை தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழத்தை நைவேத்தியமாக படைத்து வணங்கினால், கண் உபாதைகள் நீங்கும்.

* கேரளா மாநிலம் தலைசேரி அருகில் திருவெண்காடு என்ற திருத்தலம் இருக்கிறது. இங்கு ராமசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ராமரும், அனுமனும் மட்டுமே அருள்பாலிக்கிறார்கள். ராமனுக்கு எதிரில், அவரை வணங்கிய நிலையில் காட்சி தரும் ஆஞ்சநேயருக்கு அவல் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

* கும்பகோணம் அருகே உள்ளது திருவெள்ளியங்குடி. இங்குள்ள தலத்தில் தன்னுடைய கண் பார்வையை பெற்றார், சுக்ரன். அவருக்கு கண்ணொளி தந்த தீபம், இன்றளவும் 'நேத்ர தீபம்' என தொடர்ந்து எரிந்து வருகிறது. அதில் எண்ணெய் ஊற்றி வேண்டிக்கொண்டால் கண் உபாதைகள் விலகுகின்றன.

* தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது, பரக்கலக் கோட்டை. இங்கு பொது ஆவுடையார், மத்தியபுரீஸ்வரர் என்ற பெயர் கொண்ட இறைவனின் தலம் உள்ளது. இங்கே வெள்ளால மரமாகவே இறைவன் காட்சி தருகிறார். சோமவாரத்தில் முனிவர்களுக்கு உபதேசித்ததால் அன்று பூஜை நடக்கிறது. சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு ஈசன் இங்கு வந்ததால், இரவு 10.30 மணி முதல் 12 மணி வரை பூஜை நடக்கும். திங்கட்கிழமை இரவில் மட்டும் நடைதிறந்து வழிபாடு செய்யப்படும் இந்தக் கோவிலில், வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பகலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். அது தைப் பொங்கல் திருநாள்.

* மதுரை அடுத்த உசிலம்பட்டிக்கு அருகில் உள்ளது கோவிலாங்குளம். இங்கு பட்டசாமி தொண்டியாபிள்ளைசாமி கோவில் உள்ளது. இங்கு மாட்டுப் பொங்கல் அன்று வாழைப்பழத் திருவிழா நடைபெறும். அன்று வாழைப்பழம் சமர்ப்பிப்பார்கள். சோழவந்தான் என்ற ஊரில் இருந்து வாழைப்பழம் வாங்கி அங்கிருந்து தலைச்சுமையாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். வீட்டுக்கு ஒருவர் வாழைப்பழம் எடுத்துவர வேண்டும் என்பது நியதி. இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

* வேலூர் மாவட்டத்தில் உள்ளது காவேரிப்பாக்கம். இதன் அருகே உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் திருமணம் ஆகாத ஆண்கள், 116 விரலி மஞ்சளால் கோர்க்கப்பட்ட மாலை, 5 தேங்காய், ஒரு கிலோ நெய், ஒரு கிலோ நல்லெண்ணெய் சமர்ப்பித்து அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும். பெண்கள், ரங்கநாயகி தாயாருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் மணப்பேறு வாய்க்கும். குழந்தை வரம் வேண்டுபவர்கள், தாயாருக்கு பால் அபிஷேகம் செய்வதோடு, வாசல்படியில் நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டு வணங்க வேண்டும்.

* கும்பகோணம் அருகில் தேப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மூலவருக்கு 22 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு ஆவுடை, பாணம், நாகம் ஆகியவற்றுக்கு கவசம் அணிவிக்கிறார்கள். பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் இந்த அலங்காரத்தில் இறைவனை தரிசித்தால், விசேஷ பலன் கிடைக்கும் என்கிறார்கள். சூரியன் தன் ஒளிக்கதிர்களால் தினமும் இறைவனை வழிபடும் தலம் இதுவாகும்.

* சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவில், திருஞானசம்பந்தருக்கு இறைவனும், இறைவியும் காட்சியளித்த தலம். அம்பாள், சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்து ஞானத்தை ஊட்டிய தலம். இந்த ஆலயத்தில் மூன்று மூலவர்கள் உள்ளனர். பிரம்மன் பூஜித்த பிரம்மபுரீஸ்வரர் -லிங்க வடிவம், ஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்த தோணியப்பர்- குரு வடிவம், சட்டநாதர்- சங்கம வடிவம்.

Tags:    

Similar News