ஆன்மிகம்
வேளாங்கண்ணி மாதா பேராலய வளாகத்தில் இருந்த பக்தர்களின் கூட்டத்தை படத்தில் காணலாம்.

71 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2021-07-13 04:48 GMT   |   Update On 2021-07-13 04:48 GMT
கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேராலயம் திறக்கப்பட்ட 5 நாட்கள் வரை பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் காணப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்.

கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக பரவி வந்ததால் தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி காலை 6 மணி வரை ஆலயங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததால் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேராலயம் திறக்கப்பட்ட 5 நாட்கள் வரை பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 71 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணியில் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. பேராலய வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் வேளாங்கண்ணி மாதா குருக்கள்கள் தங்கும் விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
Tags:    

Similar News